Friday, 16 March 2018

வித்ர் தொழுகை

ஜமாஅத்துடன் தொழுவது விதியாக்கப்படாத ஸுன்னத்துத் தொழுகைகளில் மிக ஏற்றமானது வித்ரு தொழுகையாகும். இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் ஆய்வின்படி வித்ரு தொழுகை வாஜிபாகும். இமாம் ஷாபியீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் ஆய்வின்படி வித்ரு தொழுகை சுன்னத்தாகும்.

எப்போது தொழ வேண்டும்?

அதனுடைய நேரமாகிறது, இஷா தொழுதபின் அதிகாலை ஸுபுஹ் சாதிக் (மெய் வெள்ளை) ஏற்படுகிற நேரம் வரையிலாயிருக்கும்.

இரவின் கடைசி நேரத்தில் தொழுவது மிக்க உசிதமானது. ஃபஜ்ருக்கு முன் விழித்து (இரவின் கடைசி நேரத்தில்) வித்ரு தொழ முடியும் என்று நம்பிக்கையுள்ளவர், வித்ரை இரவின் கடைசியில் பிற்படுத்தித் தொழுவது சுன்னத்தாகும். ரமழானில் இவ்வாறு தொழுவதால் ஜமாஅத்து தவறிவிட்டாலும் சரியே.

ஒருவர் இஷாவுக்குப் பின் வித்ரு தொழுதுவிட்டுத் தூங்கி, பிறகு தஹஜ்ஜுதுக்கு எழுந்து அதனைத் தொழுதபின் மீண்டும் வித்ரைத் தொழுவது சுன்னத்தல்ல. ஆனால், தஹஜ்ஜுதுடைய எண்ணத்தில் அதனை மீண்டும் தொழுதால் அது நஃபிலாகி விடும். எனினும் மீண்டும் வித்ரைத் தொழுவது சுன்னத்தல்ல என்பதை அறிந்து கொண்டே மனமுரண்டாகத் திரும்பத் தொழுதால் அத்தொழுகை பாத்திலாகிவிடும்.

அபூபக்கர் ஸித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வித்ரு தொழுது விட்டுத் தூங்கி, பிறகு எழுந்து தஹஜ்ஜுத் தொழுவார்கள். உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தூங்கி எழுந்து வித்ரு தொழுதுவிட்டுப் பின் தஹஜ்ஜுத் தொழுவார்கள். இவ்விருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் இவ்விஷயத்தைக் கூறிய பொழுது “அபூபக்கர் நற்கருத்தை எடுத்துக் கொண்டார். உமர் தன் சக்தியைப் பயன்படுத்திக் கொண்டார்” என்று கூறினார்கள்.

உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைப் போன்றும், அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் உமர் (ரலியல்லாஹு அன்ஹு), அவர்களைப்போன்றும் செய்து வந்தார்கள். இமாம் ஷாஃபியீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் அபூஅக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைப் போன்று செய்து வந்தார்கள்.

எத்தனை ரக்அத்து தொழ வேண்டும்?

வித்ரில் குறைந்தது ஒரு ரக்அத்: மிகக் கூடுதலானது பதினொரு ரக்அத்துகள்.

நிரப்பத்தில் தாழ்ந்தது மூன்று ரக்அத்துகள்; அதைவிட நிரப்பமானது ஐந்து ரக்அத்துகள்; அதைவிட நிரப்பமானது ஏழு ரக்அத்துகள்; அதைவிட நிரப்பமானது ஒன்பது ரக்அத்துகள்; அதைவிட நிரப்பமானது பதினொரு ரக்அத்துகள்.

வித்ருடைய எண்ணத்தில் பதினொரு ரக்அத்துகளை விட அதிகப்படுத்துவது கூடாது. இத்தனை ரக்அத்துகள்தான் தொழுவேன் என்று ஆரம்பத்திலேயே குறிப்பாக்க வில்லையானாலும் பதினொரு ரக்அத்துகள் வரை தொழலாம். இத்தனை ரக்அத்துகள் தொழுவேன் என்று ஆரம்பத்தில் குறிப்பாக்கியவர் பிறகு அதிகப்படுத்த நாடினால் முன் குறிப்பாக்கிய ரக்அத்துகள் முடிந்தபிறகு அதிகமானதைத் தொழுவதற்கு எழும் முன் அதிகப்படுத்துவதை நிய்யத்துச் செய்து கொள்ளவும். குறைக்க நாடுகிறவன் அத்தஹியாத்தில் உட்காரும் முன் நிய்யத்துச் செய்து கொள்ளவும்.

எப்படி நிய்யத்து வைக்க வேண்டும்?

♣ வித்ரு இரண்டு ரக்அத்தின் தக்பீர்:

"உஸல்லி ஸலாதல் வித்ரி ரக்அத்தைனி முஸ்தக்பிலன் இலல் கஃபதி ஷரிfபதி லில்லாஹி தஆலா அல்லாஹு அக்பர்"

“சுன்னத்தான வித்ர் தொழுகையின் இரண்டு ரக்அத்துகளையும் கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வுக்காகத் தொழுகிறேன் அல்லாஹு அக்பர்” என்பதாகும்.

♣ வித்ரு ஒற்றை ரக்அத்தின் தக்பீர்:-

உஸல்லி ஸலாதல் வித்ரி ரக்அதன் முஸ்தக்பிலன் இலல் கஃபதி ஷரிfபதி லில்லாஹி தஆலா அல்லாஹு அக்பர்.

“சுன்னத்தான வித்ர் தொழுகையின் ஒரு ரக்அத்தை கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வுக்காகத் தொழுகிறேன் அல்லாஹு அக்பர்” என்பதாகும்.

எப்படி தொழ வேண்டும்?

சாதாரணமாக  ஐந்து நேர தொழுகையை தொழுவது போன்றே இதனையும் தொழவேண்டும்.  ஆனால், இரண்டு இரண்டு ரக்அத்துகளாக ஸலாத்துடன் தொழுதுவிட்டு கடைசி ஒரு ரக்அத்தை தனி ஸலாத்தில் தொழுவது ஏற்றமானது. மற்ற தொழும் முறை, ஓதல்கள் அனைத்தும் வழமை போன்றதே.

மூன்று ரக்அத் தொழ நாடியவர், முதல் ரக்அத்தில் சூரா பாத்திஹா ஓதிய பின்னர் “ஸப்பிஹிஸ்ம” சூராவும், இரண்டாவது ரக்அத்தில் “குல்யா அய்யுஹல் காஃபிரூன்” சூராவும், மூன்றாவது ரக்அத்தில் குல்ஹுவல்லாஹு, குல் அஹூது பிரப்பில் ஃபலக், குல் அஹூதுபிரப்பின் நாஸ் ஆகிய சூராக்களும் ஓதுவது சுன்னத்து.  அதிகம் தொழ நாடியவர் பிந்திய மூன்று ரக்அத்துகளில் மேற்கூறப்பட்ட சூராக்களை ஓதுவது சுன்னத்து.

ஸலாம் கொடுத்ததும் என்ன ஓத வேண்டும்?

ஸுப்ஹான மலிக்கில் குத்தூஸ் என்று மூன்று தடவை சொல்லிக் கொள்ள வேண்டும். மூன்றாவது தடவை சத்தத்தை உயர்த்திக் கூற வேண்டும்.

ரமலானில் வித்ரில் குனூத் ஓதுதல்

ரமலான் மாதத்தில் பிந்திய பதினைந்தில் வித்ர் தொழுகையில் ருகூஃ இற்கு பின்னர் நிமிர்ந்து, நிலையில் குனூத் ஓதுவது சுன்னத்தாகும். குனூத் ஓத மறந்தால் ஸஜ்தா ஸஃவு (மறதிக்கான ஸுஜூது) செய்ய வேண்டும். முந்திய பதினைந்தில் வித்ர் தொழுகையில் ருகூஃ இற்கு பின்னர் குனூத் ஓதுவது மக்ரூஃ (வெறுக்கத்தக்கது) ஆகும்.

சுன்னத் தொழுகைகளின் அவசியம்

உபரியான வணக்கங்கள்

அல்லாஹ் தன்னை வணங்குவதற்காக இந்த மனித சமுதாயத்திற்கு சில வணக்கங்களைக் கடமையாக ஆக்கியுள்ளான். இந்தக் கடமையான வணக்கங்களை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும். அவ்வாறு நிறைவேற்றும் போது அதற்காக அல்லாஹ் நற்கூலியும், அவற்றை நிறைவேற்றாதவர்களுக்கு தண்டனையும் வழங்குகின்றான்.

நஜ்த் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் தலை பரட்டையாக நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்தார். அவருடைய குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. நபி (صلى الله عليه وسلم அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப்பற்றி கேட்டார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள், “இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஐவேளை தொழுகைகள்” என்றார்கள். உடனே அவர், “அந்தத் தொழுகையைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது கடமை உண்டா?” என்றார். அதற்கு அவர்கள்,”நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறில்லை”என்றார்கள்

அடுத்து, “ரமலான் மாதம் நோன்பு நோற்பதும் ஆகும் “என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். உடனே அவர்,அதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என் மீது கடமை உண்டா?” என்றார். அதற்கு அவர்கள், “நீர் விரும்பி செய்தாலே ஒழிய வேறில்லை என்றார்கள்.

அவரிடம் நபி صلى الله عليه وسلم அவர்கள் ஸகாத் பற்றியும் சொன்னார்கள். அதற்கு அவர், “அதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது கடமையா?” என்றார். அதற்கு அவர்கள் “நீராக விரும்பிச் செய்தாலே தவிர வேறு தர்மங்கள் கடமை இல்லை” என்றார்கள். உடனே அந்த மனிதர், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன், குறைக்கவும் மாட்டேன்” என்று கூறியவாறு திரும்பிச் சென்று விட்டார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள், “இவர் கூறியதற்கு ஏற்ப நடந்து கொண்டால் வெற்றி அடைந்து விட்டார்” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : தல்ஹா பின் உபைதுல்லாஹ்(ரழி)நூல் : புகாரி

இந்த ஹதீஸில் கடமையைத்தவிர வேறு எதையும் செய்ய மாட்டேன் என்று கூறிய ஒருவரை வெற்றியாளர் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறுவதிலிருந்து கடமையான வணக்கங்களை ஒருவர் நிறைவேற்றுவதே மறுமையில் வெற்றி பெறுவதற்குப் போதுமானது என்பதை அறிய முடிகின்றது. எனினும் ஒரு மனிதர் அல்லாஹ்விடத்தில் தன்னுடைய அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்காக உபரியான வணக்கங்களைச் செய்து கொள்வதற்கு மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளதோடு ஆர்வ மூட்டியும் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் நபி صلى الله عليه وسلم அவர்கள் இது போன்ற உபரியான வணக்கங்களை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: யார் எனது நேசரை பகைத்துக் கொள்கிறாரோ அவருடன் நான் போர் தொடுக்கின்றேன் . நான் என் அடியான் மீது கடமையாக்கியிருக்கும் வணக்கத்தின் மூலமாகவே என் அடியான் எனக்கு நெருக்கமாகின்றான். அதுவே எனக்குப் பிரியமான வணக்கமாகும். எனது அடியான் உபரியான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அதன் பயனாக அவனை நான் நேசிக்கிறேன். நான் அவனை நேசிக்கும் போது அவன் செவியுறுகின்ற செவியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகி விடுகின்றேன். அவன் என்னிடம் கேட்டால், நான் அவனுக்குக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் பாதுகாவல் தேடினால் பாதுகாப்பு அளிக்கிறேன். முஃமினுடைய உயிரைக் கைப்பற்றும் போது அடையும் சங்கடத்தைப் போன்று நான் செய்கின்ற வேறு எந்தக் காரியத்திலும் நான் சங்கடம் அடைவதில்லை. [ஏனெனில்] என் அடியான் மரணத்தை வெறுக்கின்றான். நான் அவனுக்கு வேதனை அளிப்பதை வெறுக்கிறேன். அறிவிப்பவர் : அபூஹ”ரைரா(ரலி) நூல் : புகாரி

உபரியான வணக்கங்கள் புரிவது இறைவனிடம் நெருக்கத்தை அதிகப்படுத்தி நமது தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்வதற்கு வழி வகுக்கும் என்பதை மேற்கண்ட ஹ்தீஸ் விளக்குகின்றது. கடமையான வணக்கங்களை நிறைவேற்றும் போது மனிதர்கள் என்ற முறையில் குறைபாடுகள் எற்படலாம். இந்தக் குறை பாடுகள் அல்லாஹ்விடத்தில் நம்மைக் குற்றவாளிகளாக ஆக்கிவிடக் கூடாது. எனவே கடமையான வணக்கங்களில் எற்படும் குறைகளுக்கு ஒரு பரிகாரம் தேவைப்படுகிறது. அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கற்றுத் தந்த வழியில் உபரியான வணக்கங்கள் புரிவது கடமையான வணக்கங்களில் எற்படும் குறைகளை ஈடுசெய்வதாக அமைந்துள்ளது.

அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கூறுகின்றார்கள் :

நிச்சயமாக ஒர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றி தான் விசாரிக்கப்படுவான். அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும். அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி,” என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள். பிறகு ஸக்காத்தைப் பாருங்கள். மற்ற வணக்கங்களையும் இதே கணக்கின் அடிப்படையில் பார்த்து நிறைவாக்குங்கள்” என்று அல்லாஹ் கூறுகின்றான். அறிவிப்பவர் : தமீமுத் தாரி[ரலி] நூல் : தாரமீ

கடமையான வணக்கங்களில் எற்படும் குறைகளை உபரியான வணக்கங்கள் நீக்கி வடுவதுடன் இறைவனிடத்தில் நெருக்கத்தை எற்படுத்துபவையாகவும் அமைந்துள்ளன. எனவே கடமையான வணக்கத்தை நிறைவேற்றி விட்டோம் என்று அலட்சியமாக இருந்து விடாமல் உபரியான வணக்கங்களையும் நிறை வெற்றி அல்லாஹ்வின் அருளைப் பெற்றவர்களாக நாம் ஆக வேண்டும்

கடமையான தொழுகையின் முன் பின் சுன்னத்துகள்

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் ஒவ்வொரு கடமையான தொழுகைக்கும் முன்போ அல்லது பின்போ வழமையாக சுன்னத் தொழுகைகளைத் தொழுது வந்துள்ளனர்.இவை தவிர குறிப்பிட்ட பெயரையுடைய, உதாரணமாக லுஹா தொழுகை,மழைத் தொழுகை இன்னும் இது போன்ற பெயர்களில் அமைந்த சுன்னத் தொழுகைகளும் உள்ளன.

ஃபஜ்ருடைய முன் சுன்னத்

ஃபஜ்ருடைய முன் சுன்னத் இரண்டு ரகஅத்துக்களாகும். நபி صلى الله عليه وسلم அவர்கள் பஜ்ருடைய சுன்னத் அளவிற்கு வேறு எந்த உபரியான தொழுகை க்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அறிவிப்பவர்: ஆயிஷா [ரலி] நூல்: புகாரி

பஜ்ருடைய இரண்டு ரகஅத்துகள் இந்த உலகம் இன்னும் அதில் உள்ளவை அனைத்தை விடவும் மிகச் சிறந்தவையாகும் என்று நபி صلى الله عليه وسلم] அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அயிஷா[ரலி] நூல் : முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் பஜ்ருக்கு முன்சுன்னத் தொழும் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உள்ளதாலும், அத்தொழுகையை சிறப்பித்துக் கூறியுள்ளதாலும் பஜ்ருடைய முன் சுன்னத்தை நாம் தவறவிடாமல் கவனமாகத் தொழ வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் பஜ்ருடைய இரண்டு ரகஅத்துகளைத் தொழுபவர்களாக இருந்தனர். அவ்விரண்டு ரகஅத்துகளிலும் சூரத்துல் பாத்திஹாவை ஒதினார்களா என்று நான் எண்ணுமளவுக்கு சுருக்கமாகத் தொழுவார்கள். அறிவிப்பவர் : அயிஷா[ரலி] நூல்: புகாரி முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் இகாமத் தனது காதுகளில் விழுந்து விட்டதை போல் சுபுஹ் தொழுகையின் முன் இரண்டு ரகஅத்துகளை (விரைந்து)தொழுவார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர்[ரலி] நூல் : புகாரி

பஜ்ருடைய சுன்னத்தில் ஒத வேண்டியவை

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் பஜ்ருடைய இரண்டு ரக அத்துகளில் குல்யா அய்யுஹல் காஃபிரூன் மற்றும் குல்ஹு”வல்லாஹு” ஆகிய அத்தியாயங்களை ஒதுவார்கள். அறிவிப்பவர் : அபூஹ”ரைரா[ரலி] நூல்: முஸ்லிம்

வலப்புறமாகப் படுக்கவேண்டுமா?

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் ஃபஜ்ருடைய சுன்னத் தொழுததும் வலப்புறம் சாய்ந்து படுத்துக் கொள்வார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா[ரலி] நூல்: புகாரி

நபி صلى الله عليه وسلم அவர்கள் ஃபஜ்ருடைய சுன்னத் தொழுததும் நான் விழித்திருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். இல்லாவிட்டால், தொழுகைக்கு அழைக்கும் வரை படுத்துக்கொள்வார்கள். அறி: ஆயிஷா [ரலி] நூல் : புகாரி

பஜ்ருக்கு முன் தொழாவிட்டால்

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் ஒருவரை சுபுஹ”க்குப் பின் இரண்டு ரக அத்துகள் தொழக் கண்டார்கள் அப்போது அவர்கள்,”சுபுஹ் தொழுகை இரண்டு ரகஅத்துகள்தான்” என்று சொன்னார்கள். அதற்கு அவர்,”சுபுஹ”க்கு முந்திய இரண்டு ரகஅத்துகளைத் தொழவில்லை, அவ்விரண்டையும் இப்போது தொழுதேன்” என்று பதிலளித்ததும், நபி صلى الله عليه وسلم அவர்கள் மவ்னமாகி விட்டார்கள். அறிவிப்பவர் : கைஸ் பின் அம்ர்[ரலி] நூல்: திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா

யார் ஃபஜ்ருடைய(சுன்னத்) இரண்டு ரகஅத்துகளைத் தொழவில்லையோ அவர் அவ்விரு ரகஅத்துகளையும் சூரியன் உதித்தபின் தொழுவாராக என்று அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ”ரைரா[ரலி] நூல்: திர்மிதி

லுஹருடைய முன் சுன்னத்

நான் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் லுஹருக்கு முன் இரண்டு ரகஅத்துகளையும், லுஹருக்கு பின் இரண்டு ரகஅத்துகளையும், மக்ரிபுக்கு பின் இரண்டு ரக அத்துகளையும், இஷாவுக்கு பின் இரண்டு ரகஅத்துகளையும், ஜும்ஆ வுக்குப் பின் இரண்டு ரகஅத்துகளையும் தொழுது இருக்கிறேன். மக்ரிப், இஷா (தொழுகையினுடைய சுன்னத்)தொழுகைகளை நபி صلى الله عليه وسلم அவர்களது வீட்டில் தொழுது இருக்கிறேன். அறிவிப்பவர் இப்னு உமர்[ரலி] நூல்: புகாரி

நான் ஆயிஷா[ரலி] அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்களின் உபரியான வணக்கத்தை பற்றி வினவினேன். அதற்கு அவர்,” நபி صلى الله عليه وسلم அவர்கள் என்னுடைய வீட்டில் லுஹருக்கு முன் நான்கு ரகஅத்துகள் தொழுது விட்டு, புறப்பட்டுச் சென்று மக்களுக்குத் தொழவிப்பார்கள். பிறகு என்னுடைய வீட்டுக்கு வந்து இரு ரகஅத்துகள் தொழுவார்கள்” என்று விளக்கமளித்தார்கள். அறிவிப்பவர் :அப்துல்லாஹ் பின் ஷிக்கீர்[ரலி] நூல் : முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் லுஹர் தொழுகைக்குமுன் நான்கு ரகஅத்து களையும், ஃபஜ்ரு தொழுகைக்கு முன் இரண்டு ரகஅத்துகளையும் விடவே மாட்டார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா[ரலி] நூல் : புகாரி

நபி صلى الله عليه وسلم அவர்கள் லுஹருக்கு முன்பு நான்கு ரகஅத்துகளைத் தொழவில்லை என்றால் அந்நான்கு ரகஅத்துகளை லுஹருக்குப் பின் தொழுவார்கள். அறிவிப்பவர் : அயிஷா[ரலி] நூல் : திர்மிதி

மேற்கண்ட ஹதீஸ்களில் முதலாவது ஹதீஸ் லுஹருக்கு முன்சுன்னத் இரண்டு ரகஅத்துகள் எனவும், இரண்டாவது ஹதீஸ் நான்கு ரகஅத்துகள் எனவும் குறிப்பிடுகின்றன. இரண்டு ஹதீஸ்களையும் முரண்பாடில்லாமல் விளங்கவேண்டும்.அதாவது சில சமயங்களில் இரண்டு ரகஅத்துகளையும் சில சமயங்களில் நான்கு ரக அத்துகளையும் தொழுதார்கள் என்றே புரிந்து கொள்ள வேண்டும். எனவே இரண்டு அல்லது நான்கு ரகஅத்துகள் லுஹருக்கு முன் சுன்னத்தாக தொழுது கொள்ளலாம்.

லுஹருடைய பின் சுன்னத்

நான் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் லுஹருக்கு முன் இரண்டு ரகஅத்துகளையும், லுஹருக்கு பின் இரண்டு ரகஅத்துகளையும், மக்ரிபுக்கு பின் இரண்டு ரகஅத்துகளையும், இஷாவுக்கு பின் இரண்டு ரக அத்துகளையும், ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரகஅத்துகளையும் தொழுது இருக்கிறேன். மக்ரிப், இஷா (தொழுகையினுடைய சுன்னத்) தொழுகைகளை நபி صلى الله عليه وسلم அவர்களது வீட்டில் தொழுது இருக்கிறேன். அறிவிப்பவர் : இப்னு உமர்[ரலி] நூல் : புகாரி

யார் லுஹருக்கு முன்பு நான்கு ரகஅத்துகளும் பின்பு நான்கு ரகஅத்துகளும் தொழுகின்றாரோ அவருக்கு நரகத்தை அல்லாஹ் தடுத்து விடுகிறான் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூற நான் செவியுற்றேன். அறிவிப்பவர் : உம்மு ஹபீபா[ரலி] நூல் : திர்மிதி

அஸருடைய முன் சுன்னத்

நபி صلى الله عليه وسلم அவர்கள் அஸருக்கு முன் நான்கு ரகஅத்துகள் தொழுபவர்களாக இருந்தனர். அறிவிப்பவர் : அலி[ரலி] நூல் : திர்மிதி, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா

நபி صلى الله عليه وسلم அவர்கள் அஸருக்கு முன் இரண்டு ரகஅத்துகள் தொழுதார்கள். அறிவிப்பவர்: அலி[ரலி] நூல்: அபூதாவூத்

மக்ரிபுடைய முன் சுன்னத்

மக்ரிபுக்கு முன் இரண்டு ரகஅத்துகள் தொழுங்கள்! மஃரிபுக்கு முன் இரண்டு ரகஅத்துகள் தொழுங்கள்! விரும்புகிறவர் மஃரிபுக்கு முன் இரண்டு ரகஅத்துகள் தொழுங்கள்! என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகப்பல்(ரலி) நூல்:அஹ்மத்,புகாரி,அபூதாவூத்

நபி صلى الله عليه وسلم அவர்கள் மக்ரிபு தொழுகைக்கு முன் இரண்டு ரகஅத்துகள் தொழுதார்கள். அறிவிப்பவர் : அப்துல்லஹ் பின் முகப்பல்[ரலி]நூல் : இப்னு ஹிப்பான்

மஃரிபுடைய பின் சுன்னத்

நபி صلى الله عليه وسلم அவர்கள் மக்ரிபுக்குப் பின் இரண்டு ரகஅத்துகள் தொழுபவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: ஆயிஷா[ரலி] நூல்: முஸ்லிம்,அஹ்மத், அபூதவூத்,திர்மிதி

இஷாவுடைய முன் சுன்னத்

இஷாவுக்கு முன்சுன்னத் உள்ளதா என்பதற்கு நேரடியாக எந்த ஆதாரத்தையும் காண முடியவில்லை. ஆயினும் ஒவ்வொரு தொழுகைக்கும் முன் சுன்னத் இருக்கின்றது என்று பொதுவாக ஹதீஸ் உள்ளதால் அதனடிப்படையில் இஷாவுக்கு முன் சுன்னத் தொழலாம். ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் ஒரு தொழுகை உண்டு. விரும்பியவர்கள் தொழலாம் என்று அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகப்பல்[ரலி] நூல் : புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயி

இஷாவுக்குப் பின் சுன்னத்

நபி صلى الله عليه وسلم அவர்கள் இஷாவுக்குப்பின் இரண்டு ரகஅத்துகள் தொழுபவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: இப்னு உமர்[ரலி] நூல்: புகாரி,முஸ்லிம், அஹ்மத்.

ஜும்ஆவுக்குப் பின் சுன்னத்

இப்னு உமர்(ரலி) அவர்கள் ஜும்ஆ தொழுகையை நீட்டித் தொழுவார்கள். ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்துக்களை தன் வீட்டில் தொழுவார்கள். அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் இதை செய்தார்கள் என்றும் கூறுவார்கள். அறிவிப்பவர்: நாபிஃ நூல்: அபூதாவூத்

உங்களில் ஒருவர் ஜும்ஆ தொழுதால் அதன் பின்பு நான்கு ரக்அத்துகள் தொழுவாராக என்று அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம், திர்மிதி, நஸயீ, அபூதாவூத்

வெற்றியின் இரகசியம் இஸ்திகாரா தொழுகை!

بسم الله الرحمن الرحيم

سر النجاح – ومفتاح الخير والبركة والفلاح

ஒரு  வாலிபன் ஒரு பெண்னை  திருமணம் செய்வதற்காக வேண்டி இஸ்திஹாரா தொழுகையை தொழுகின்றான்;  பின்னர் திருமணத்துக்காக    தயாராகின்றான்;  அப்போது     அவனது சகோதரன்  அப்பெண்னை  திருமணம்  முடிப்பதை விட்டும் அவனைத் தடுக்கின்றான். வேறு குடும்பத்தில் பெண் பார்க்க வேண்டுகிறான்.  அந்த வாலிபனோ, தான் பார்த்த பெண்னை மணம் முடிப்பதற்காக தனது சகோதரனை  கவரும் வகையில் பல முயற்சிகளை மேற்கொள்கிறான்;  ஆனால் அனைத்து முயற்சிகளும்  பயனளிக்கவில்லை.  இறுதியில்  வேறொரு பெண்னை மணக்கின்றான்.  குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பின்னர் அவ்வாலிபனுக்கு முதலாவது திருமணம்  பேசப்பட்ட அப்பெண் மரணிக்கின்றாள். தற்போது அவனுக்கு தான் தொழுத அந்த இஸ்திஹாரா தொழுகையில் முழுமையான திருப்தி ஏற்பட்டதோடு தன்னை தடுத்த தனது சகோதரனின் விருப்பமின்மை அவனுக்கு நல்லதாக அமைந்தது.

ஒரு வாலிபன் தொழிற்சாலை ஒன்றில் காலை மாலை என இரண்டு நேரங்களிலும் வேலை பார்த்து வந்தான்;  ஆனால் அவனது சம்பளமோ தனது அடிப்படைத் தேவையைக்கூட நிறைவேற்ற  போதாது; அல்லாஹ் அவனுக்கு நேரான வழியைக் காட்டினான்;  அல்- குர்ஆன் மனனப்பிரிவில் சேர்ந்தான்;  அத்தோடு பள்ளியில் நடக்கக்கூடிய மார்க்க வகுப்புக்களிலும், மார்க்க சொற்பொழிவுகளிலும் தவறாமல் கலந்து கொள்பவனாக இருந்தான். என்றாலும் அவனது தொழிலோ அதற்குத் தடையாகவே இருந்து வந்தது. இதனால், தான் மனைவி மக்களுடன் வீட்டில் இருப்பதற்கும் வீட்டின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும்  மிக மிக குறைவாகவே  அவனுக்கு நேரம் கிடைத்தது.

ஒரு நாள் அறிஞர் ஒருவரிடம் சென்று, தனது கஷ்டத்தை, முறைப்பாட்டை முன் வைக்கின்றான்.  அவர் சில அறிவுரைகளைக் கூறினார். அன்றிலிருந்து அந்த வேலையை வெறுத்தவனாக  தான் அல்-குர்ஆனையும் கற்று, மார்க்க வகுப்புக்களிலும் கலந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு வேறொரு வேலையை தேடுகிறான். ஆனாலும் எங்கு தான் செல்ல? பின்னர் மார்க்க அறிஞர் அவனை பார்த்து,  நன்மையை, தனது தேவையை வேண்டி தொழும்  தொழுகையைப் பற்றி (இஸ்திகாரா தொழுகை) தெரியுமா? என்று கேட்க, அவன் தெரியாது என்று கூறினான். பின்னர் அதனை கற்றுக் கொடுத்தார். அவன் உடனே இஸ்திகாரா தொழுகையைத் தொழுதுவிட்டு இறைவன் பால் நம்பிக்கை வைத்தவனாக பிரார்திக்கின்றான். பின்னர் முயற்ச்சி செய்து ஒரு வேலையை பெற்றுக் கொள்கின்றான்.

சிறிது காலத்துக்குப் பிறகு மார்க்க அறிஞரிடம் மகிழ்ச்சியுடன் சநதோஷமான நிலையில்  சென்று கூறினான். அல்லாஹ் எனது கஷ்டத்தை நீக்கினான்;  குறைந்த நேரத்தில் அதிக சம்பளத்தை பெறக்கூடிய ஒரு தொழிலைப் பெற்றுக் கொண்டேன்; இதன் மூலம் மார்க்க வகுப்புக்களிலும், தனது மனைவி மக்களுடனும்  இருப்பதற்கு மிக மிக வசதியாக இருப்பதாக கூறினான்.

இதனது இரகசியம் தான் என்ன? இவர்களது வெற்றிக்கு காரணமாக அமைந்தது எது? இதுதான் இஸ்திகாரா தொழுகையின் இரகசியம்! இதனை பற்றிய தகவல்களை பின்வருமாறு பார்ப்போம்.

இஸ்திகாரா தொழுகையின் முக்கியத்துவமும் சிறப்பும்!

மனிதனுக்கு எவ்வளவு தான் அறிவு ஞானம் கொடுக்கப்பட்டிருந்தாலும் பல திறமைகள் இருந்தலும், தன்னைப் படைத்த இறைவன் பால் ஒவ்வொரு நொடியிலும் அவனுக்குத் தேவைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. ஒரு மனிதன் குறித்த வேலையை செய்வதற்கு பல திட்டங்களை  இட்டு எந்த முறையான வழிகளை அதற்கு கையால வேண்டுமோ அனைத்தையும் கையாண்டு  செய்வதற்கு முற்படலாம். இறுதியில் அவைகள் அனைத்தும் பிரயோஜனம் அற்றவைகளாக மாறுகின்றன.

ஒரு மனிதனிடம் இரண்டு விஷயங்களுக்கு மத்தியில் தடுமாற்றம் ஏற்படலாம்! எதனை செய்தால் தனது குறிக்கோளை அடைய முடியும்? என்பதில் முடிவை காண முடியாதவனாக இருப்பான்!  சில வேலை அச்செயல் அவனை தான் விரும்பாத முடிவுக்கு கொண்டு சேர்க்கும்; அல்லது அது அவனை அழித்து விடும்! இவ்வாறான நிலைமைகளில் அவன் தடுமாற்றமுள்ளவனாக இருப்பான்.

இவ்வாறாண நிலைமைகளில் ஜாஹிலியா கால அரேபியர்கள் இவற்றிலிருந்து விடுபடுவதற்காக சில வழிமுறைகளைக் கையாண்டார்கள்.  அதுதான் அம்பெய்து குறி பார்ப்பதாகும்! அவர்களிடம் மூன்று சீட்டுகள் இருக்கும்; அவற்றில் ஒன்றில் “செய்” என்றும் மற்றதில் “செய்யாதே” என்றும் மற்றொன்றில்  “ஒன்றும் இருக்காது”! இவற்றில் “செய்”என்ற சீட்டு விழுந்தால் குறித்த அக்காரியத்தைச் செய்வார்கள். “செய்யாதே” என்ற சீட்டு விழுந்தால் அதனைச் செய்ய மாட்டார்கள்.

“ஒன்றும் இல்லாத” சீட்டு விழுந்தால் ஏதோ ஒன்று விழும் வரை தொடர்ந்து  சீட்டுகளை போட்டுக்கொன்டே இருப்பார்கள். இவ்வாறான நிலைமைகளில் இருந்து அல்லாஹ் முஃமின்களை பாதுகாத்தான். அதனை அவர்களுக்கு தடை செய்தான்.

قال تعالى (وأن تستقسموا بالأزلام ذلكم فسق….) سورة المائدة :03

அல்லாஹ் கூறுகிறான்:

“நீங்கள் அம்பெறிந்து குறிபார்ப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளன. இவை பாவமாகும்” (அல்குர்-ஆன் 5:3)

இதற்கு பகரமாக, நன்மையை நாடி தொழும் தொழுகையை (ஸலாத்துல் இஸ்திகாரா) நபி (ஸல்)அவர்கள் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். இதில் இருக்கக்கூடிய பிரார்தனை, “அல்லாஹ்வின்   மீது நம்பிக்கை வைத்தல், உதவி தேடுதல் அனைத்து சக்திகளை விட்டும் ஏக இறைவனது சக்தியை மாத்திரம் எதிர்பார்த்தல் முழுமையாக அவனது செயல்கள் வர்னனைகளை ஒருமைப்படுத்தல் அல்லாஹ்வையே பொறுப்பு சாட்டுவது போன்ற முக்கியமான கருத்துக்களை உள்ளடக்கிய பிரார்த்தனையாகும்.”

அல்லாஹ் மனிதனிடத்தில் கொண்ட கருனையால் தனது அடியானுக்கு (இஸ்திகாரா தொழுகையை) செய்யும்படி சொல்கின்றான். இச்செயலை செய்வதற்கு படைத்த இறைவனுக்கு முன்னால் ஒரு சில நிமிடங்களை மாத்திரமே செலவு செய்ய வேண்டும. இக்காரியத்தைச் செய்கின்றவர்கள் மிக மிக அரிதே! இத்தொழுகையின் மூலம் தான் நாடியதை தனது இறைவனிடம் கேட்பான்! அது மிகச் சிறிய விஷயமாக இருந்தாலும் அல்லது மிகப் பெரிய விஷயமாக இருந்தாலும் சரியே!

இத்தொழுகையின் மூலமும், பிரார்த்தனையின் மூலமும் ஒரு அடியான்  சிறிய விஷயமொன்றை நாடலாம்! ஆனால் காலப் போக்கில் அப்பிரார்தனையின் மூலம் அந்த விஷயம் பெரிய நன்மையைத் தரக்கூடியதாக மாறலாம்! இதனால் அனைத்து நன்மையான சந்தர்பங்களிலும் இத்தொழுகையைத் தவறவிடக் கூடாது. இதனது முக்கியத்துவத்தை நபி (ஸல்) அவர்கள் எமக்கு காட்டித் தந்தார்கள்! அவர்கள் தனது தோழர்களுக்கு அல்-குர்ஆனில் ஒரு சூராவை கற்று கொடுப்பதை போன்று இத்தொழுகையைக் கற்று கொடுத்தார்கள்.

ஜாபிர் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:

“நபி (ஸல்) அவர்கள் அல்-குர்ஆனில் ஒரு சூராவை கற்றுத் தருவதை போன்று இஸ்திகாரா தொழுகயைக் கற்றுதருபவராக இருந்தார்கள்”

இஸ்திகாரா  தொழுகையின் சிறப்பையும் முக்கியத்துவத்தையுமே இந்த நபிமொழி உறுதிப்படுத்துகின்றது.

இஸ்திகாரா  தொழுகையை தொழும் முறை:

பர்ளு தொழுகை அல்லாத இரண்டு ரக்அத்துக்களை இஸ்திகாரா தொழுகை என்ற என்னத்தோடு  தொழ வேண்டும். அதில் சூரா பாதிஹாவையும் அதன் பின்னால் அல்குர்-ஆனில் சில வசனங்களையும் ஓத வேண்டும். சுஜூதில் அல்லது அத்தஹியாத்தில் அல்லது ஸலாம் கொடுத்ததற்கு பிறகு  இஸ்திகாரா நபிமொழியில் வரக்கூடிய பிரார்த்தனையை, துஆவை பொருள் விளங்கி ஓதவேண்டும். தொழுகைக்கு பிறகு பிரார்த்திப்பதே மிக சரியான முறையாகும்.

இஸ்திகாரா தொழுகையைப் பற்றி வரக்கூடிய நபிமொழியும் பிரார்தனையும்:

عن جابر رضي الله عنهما قال:كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا الاستخارة في الأمور كلها كما يعلمنا السورة من القرآن،يقول:إذا هم أحدكم بالأمر فليركع ركعتين من غير الفريضة  ثم  ليقل : اللهم إني أستخيرك  بعلمك، وأستقدرك بقدرتك، وأسألك  من فضلك العظيم،فانك تقدر ولا أقدر،وتعلم ولا أعلم،وأنت علام الغيوب،اللهم إن كنت تعلم أن هذا الأمر- ويسمي حاجته-خير لي في ديني ومعاشي وعاقبة أمري-أو

قال عاجل أمري وآجله-فاقدره لي ويسره لي،ثم بارك لي فيه،وان كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري- أو قال:عاجله وآجله-فاصرفه عني واصرفني عنه،واقدر لي الخير حيث كان ثم أرضني به.   (أخرجه البخاري. )

“அல்லாஹூம்ம இன்னீ அஸ்தகீருக பி இல்மிக, வ அஸ்தக்திருக பீகுதுரதிக, வஅஸ் அலுக மின் பழுலிகல் அழீம், பஇன்னக தக்திர் வலா அக்திர், வதஃலம் வலா அஃலம், வ அன்த அல்லாமுல் குயூப், அல்லாஹூம்ம இன் குன்த தஃலம் அன்ன ஹாதல் அம்ர – (தேவையைக் குறிப்பிட வேண்டும்) -கைருன் லீ பீ தீனீ வமஆஷீ வஆகிபது அம்ரீ பக்துர்கு லீ வயஸ்ஸிர்கு லீ சும்ம பாரிக்லீபீ, வ இன்குன்த தஃலம் அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன் லீ பீதீனீ  வமாஆஷீ  வ ஆகிபது அமரீ பஸ்ரிப்கு அன்னீ வஸ்ரிப்னீ அன்கூ  வக்துர்லியல் கைர ஹைசு கான சும்ம அர்லினீ பீஹ்”

இதன் பொருள்:

“யா அல்லாஹ்! நான் உன்னிடம் உனது ஞானத்தைக் கொண்டு நன்மையை யாசிக்கின்றேன்; மேலும் உனது ஆற்றலைக் கொண்டு ஆற்றலை யாசிக்கிறேன்; மேலும் உன்னிடமிருந்து உனது மகத்தான அருளை யாசிக்கிறேன்; ஏனெனில் நீ ஆற்றல் பெற்றவன்; என்னிடம் எந்த ஆற்றலும் இல்லை. மேலும் நீ நன்கு அறிபவன். நான் எதனையும் அறியமாட்டேன். மேலும் நீயே மறைவானவை அனைத்தும் அறிந்தவன்! யாஅல்லாஹ்! இந்த விஷயம் (விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்) எனக்கும், எனது தீனுக்கும், எனது வாழ்கைக்கும், எனது விவகாரத்தின் முடிவுக்கும்-இவ்வாறும் சேர்த்துக் கொள்ளலாம். எனது உடனடியான, தாமதமான விவகாராத்திற்கும் – நன்மையானது என நீ அறிந்தால் இதனை எனது விதியில் சேர்ப்பாயாக! மேலும் இதனை எனக்கு எளிமையாக்கித் தருவாயாக! பிறகு இதில் எனக்கு பாக்கியம் அருள்வாயாக! ஆனால் இந்தப் பணி எனக்கு, எனது தீனுக்கும் எனது வாழ்கைக்கும் எனது விவகாரத்திம் முடிவுக்கும் – இவ்வாறு சேர்த்துக் கொள்ளலாம். எனது உடனடியான், தாமதமான விவகாரத்துக்கும்) தீமையானது என நீ அறிந்தால் இதனை என்னை விட்டு அகற்றி விடுவாயாக! மேலும் எனது விதியில் நன்மையை சேர்ப்பாயாக! அது எங்கிருந்தாலும் சரியே! பிறகு அதில் எனக்கு திருப்தி ஏற்படுத்தித் தருவாயாக!” (ஆதாரம் புகாரி)

இஸ்திகாரா தொழுகையை தொழும் நேரம்:

இஸ்திகாரா தொழுகைக்கு என்று குறிப்பிட்ட நேரங்கள் கிடையாது. எனினும் தொழுவதற்கு தடுக்கப்பட்ட நேரங்களை தவிர்ந்து கொள்வது நல்லதே! பஜுர் தொழுகையிலிருந்து சூரியன் ஒரு ஈட்டி உயரும் வரை உள்ள நேரம்,  மற்றும் அஸருடைய நேரம் முடிந்ததிலிருந்து சூரியன் மரையும் வரை உள்ள நேரங்களையும் குறிப்பிடலாம். இவ்வாறான நேரங்களில் நபிலான தொழுகைகள் தடுக்கப்பட்டுள்ளன. ஏதாவதொரு காரணத்துக்காக தொழும் தொழுகையை தொழலாம்.  உதாரணமாக பள்ளியுடைய கானிக்கை தொழுகை (தஹீயதுல் மஸ்ஜித்) மேலும் பிரார்த்தனைகள் ஏற்று கொள்ளப்படும் நேரங்களில் தொழுவது வரவேற்கத்தக்க விஷயமாகும். உதாரணமாக இரவின் கடைசி பகுதி, பாங்குக்கும் இகாமத்துக்கும் இடைப்பட்ட நேரம், இஸ்திகாரா தொழுகை தொழ தடுக்கப்பட்ட நேரத்தை விட்டும் பிந்திவிடுமானால் அந்நேரத்தில் தொழலாம்.

தவறான நம்பிக்கை:

இஸ்திகாரா தொழுகையை இரவில் தூங்குவதற்கு முன் தொழுதுவிட்டு தூங்கினால் அத்தூக்கத்தில் ஒரு கணவு காண்பார்; அக்கணவே சரியானது என்று சில மனிதர்கள் தவறாக இதனை புரிந்திருக்கின்றார்கள். இது முற்றுமுழுதாக  பிழையான கருத்தும் நபிமொழிக்கு மாற்றமான  முறையும் ஆகும். மேற்குறிப்பிட்டது போல் இத்தொழுகைகென்று குறிப்பிட்ட நேரம் இல்லை. அத்தோடு இஸ்திகாரா தொழுபவர் கணவு காண்பது நிபந்தனையும் அல்ல! ஆகையால் எப்பொழுது ஒரு மனிதனுக் தேவை வருகின்றதோ அப்பொழுது அவன் தொழுவான். பின்னர் அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைப்பான்.

இஸ்திகாரா தொழுவதற்கு அனுமதிக்கப்பட்ட விஷயங்கள்:

அனைத்து விஷயங்களுக்காகவும் தொழலாம்! அது மிகச் சிறிய விஷயமாக இருந்தாலும் அல்லது மிக பெரிய விஷயமாக இருந்தாலும் சரியே! எத்தனை மனிதர்களது சிறிய விஷயங்கள் மிக பெரிய விஷயங்களாக மாறி இருக்கின்றன! இந்த நபிமொழியில் வரக்கூடிய “அனைத்து விஷயங்களிலும்” என்ற சொல் இதற்கு  ஆதாரமாக  இருப்பதோடு அதனை உறுதிப்படுத்துகின்றது.

ஆனால் இரண்டு விஷயங்களை விட்டு தவிர்ந்து கொள்ள வேண்டும்:

(1) கட்டாயமான கடமைகள், தடுக்கப்பட்டவைகள்; உதரணமாக ஒரு மனிதன் லுஹர் தொழுவதற்காக வேண்டி லுஹர் தொழுவதா? இல்லையா? என்பதற்காக இஸ்திகாரா தொழுவது கூடாது! அல்லது ஹராமக்கப்பட்டிருக்கின்ற வட்டியை வாங்குவதற்கு முன்னால் வட்டியை வாங்குவதா? இல்லையா? என்பதற்கு இத்தொழுகை தொழக் கூடாது! ஏனெனில் லுஹர் தொழுகை என்பது ஒரு கடமையான தொழுகை. அதனை ஒரு முஸ்லிம் தொழுதுதான் ஆக வேண்டும். அத்தோடு வட்டி எடுப்பது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட விஷயங்களில் ஒன்று. அதனை ஒருவன் தவிர்ந்துதான் ஆகவேண்டும்.

(2) வழமையான விஷயங்கள், உதாரணமாக ஒருவன் உண்பதற்கும் குடிப்பதற்கும் இஸ்திகாரா  தொழ முற்படுகிறான் உண்பதா? குடிப்பதா? என்று! இதற்கு இஸ்திகாரா தொழவேண்டிய தேவையும், பிரார்திக்க வேண்டிய அவசியமும் கிடையாது. ஏனெனில் ஒருவன்  உண்பதும் குடிப்பதும் இன்றியமையாத தேவைகளாகும்.

அல்லாஹ்வினால் தேர்ந்தெடுத்தவற்றிலே நன்மையுண்டு:

ஒரு முஸ்லிம், ஒரு விஷயத்துக்காக இஸ்திகாரா தொழுவான்; ஆனால் அந்த விஷயத்தையே முக்கியத்துவப்படுத்தி அதிலே உறுதியாக இருப்பான்; அல்லாஹ் அவனுக்கு அதனை விதியாக்கி இருக்கமாட்டான்!  உதாரணமாக, ஒருவன் தனக்கு விரும்பிய பெண்னை திருமணம் முடிப்பதற்காக இஸ்திகாரா தொழலாம். ஆனால் அல்லாஹ்வின் விதியில் அது எழுதப்பட்டிருக்காது.  இவ்வாறான நிலைமையில் அல்லாஹ்வின்பால் அவன் நல்லெண்ணம் வைக்க வேண்டும். அவனது விதியை முழுமையாக பொருந்திக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கபட்டவற்றிலே நன்மையும் வெற்றியும் உண்டு என்று அவன் நம்ப வேண்டும். சில வேளைகளில் அவன் விரும்பிய அப்பெண் அவன் மோசமாகுவதற்கு அல்லது பாவியாகுவதற்கு காரணமாக இருக்கலாம்! ஆனால் அதனை அவன் அறியமாட்டான்.  யாவற்றையும் அறிந்த அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

قال تعالى(وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون)

سورة البقرة :216

அல்லாஹ் கூறுகிறான்:

“நீங்கள் ஒன்றை வெறுப்பீர்கள்; அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்; நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள்; அது உங்களுக்கு தீங்காகவும் இருக்கலாம்; நீங்கள் அறிய மாட்டீர்கள் அல்லாஹ்வே மிக அறிந்தவன்” (அல்-குர்ஆன் 2:216)

அதிகமான மக்கள் பல விஷயங்களை வெறுத்திருப்பார்கள்; ஆனால் அவைகள் அவனது விதியில்-அல்லாஹ்வினால் நன்மையுள்ளதாக எழுதப்பட்டிருக்கும்!  பிற்காலத்தில் அதில் அவனுக்கு நன்மையாக அமைகின்றது. அதே போன்று எத்தனையோ மனிதர்கள் ஏராளமான விஷயங்களை விரும்பி இருப்பார்கள்.  விரும்பப்பட்ட அவ்விஷயங்கள் அவனை அழிவின்பால் இட்டுச் சென்றிருப்பதைப் பார்க்கலாம். இதனையே அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

قال تعالى (والله يعلم وأنتم لا تعلمون)سورة البقرة :216

அல்லாஹ் கூறுகின்றான்:

“அல்லாஹ் தான் நன்கறிபவன் நீங்கள் அறிய மாட்டீர்கள்”  (அல்-குர்ஆன் 2:216)

சில விஷயங்களை பொருத்தவவையில், அல்லாஹ் ஒரு மனிதனுக்கு நன்மையை நாடி இருப்பான்.  ஆனால் அதில் அவனுக்கு வெற்றி இருக்காது! உதாரணமாக ஒரு மனிதன் ஒரு பெண்னை திருமணம் செய்வதற்காக இஸ்திகாரா தொழுது பிரார்திப்பான்; அத்திருமணம் நடக்கும்;  குறித்த அப்பெண்னை மணப்பான்;  காலப்போக்கில்  அத்திருமணம் சீர்குழைந்துவிடும்; எனவே இச்சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வை பொருந்திக்கொள்ள வேண்டும். அதுவும் அவனுக்கு நல்லதாகவே இருக்கும் அதனை அவன் அறியமாட்டான்

இஸ்திகாரா தொழுகையினால் ஏற்பட்ட ஒரு உண்மை நிகழ்வொன்றை காண்போம்:

ஹிஜ்ரி 1400 ஆம் ஆண்டு ஒருவர் பிரயாணத்தை மேற்கொள்வதற்காக ரியாத் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றார். அவர் விமான நுழைவு சீட்டையும் (Boarding Pass) பெற்று  விமானத்துக்கு புறப்படும் இடத்தில், அழைக்கும் வரை எதிர்பார்த்து இருந்தார்.    அப்போது தன்னை அறியாமல் தூக்கம் அவரை மிகைத்து விட்டது. திடீரென விழித்தபோது, விமானம் புறப்படக்கூடிய நேரம் நெருங்கிவிட்டது; வாயில்கள் மூடப்பட்டுவிட்டன;  அப்போது அவருக்கு விமானத்தில் ஏறுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை!

விமானத்திற்குள் நுழைவதற்காக தன்னால் முடியுமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். இறுதியில் அனைத்துமே பயனளிக்கவில்லை! பின்னர் தான் கவலையுற்றவராக தடுமாறிக் கொண்டிருந்தார். குறித்த விமானம், ஒரு சில வினாடிகளில் ஏதோ ஒரு கோளாறு இருப்பதாக அடுத்த விமான நிலையத்திற்கு தரையிறக்குமாறு கட்டளையிடப்பட்டது. ஆனால் தரையிறக்கப்படுவதற்கு முன்னரே 300  பிரயாணிகளுடன் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இதனது இரகசியம் என்ன?

அம்மனிதர் தீப்பிடிக்கும் என்று கற்பனைக் கூட செய்திருக்க மாட்டார்! இதுதான் அல்லாஹ்வின் ஏற்பாடு! நிச்சயமாக அம்மனிதருக்கு பிரயாணம் செய்ய கிடைக்கவில்லை; அதன் மூலம் அவருக்கு நலவு இருந்திருக்கின்றது!

எப்பொழுது துஆவுடன் மாத்திரம்  சுருக்கிக்கொள்ள வேணடும்?

சிலருக்கு சில சந்தர்ப்பத்தில் தொழுகையை நிறைவேற்ற முடியாதவர்களாக இருப்பார்கள்! மாதவிடாய், நிபாஸ் நிலைமைகளில் இருக்ககூடிய பெண்களைப் போன்றவர்ககளைக் கூறலாம். இவர்களை பொருத்தவரையில் தொழ முடியுமான நிலை வரும்வரை தொழுகையைப் பிற்படுத்தலாம்.  குறித்த அச்சந்தர்ப்பத்தைப் பிற்படுத்த முடியாவிட்டால், தொழுதுதான் ஆகவேண்டுமானால் துஆவுடன் மாத்திரம் நிறுத்திக் கொள்ளலாம். அதாவது நபிமொழியில் வரக்கூடிய பிரார்தனையை மாத்திரம் கேட்பார். இதற்கு பின்வரக்கூடிய வசனங்கள் ஆதாரமாக அமைகின்றன.

قال تعالى(لا يكلف الله نفسا إلا وسعها….)سورة البقرة286

அல்லாஹ் கூறுகின்றான்:

“அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை”  (அல்-குர்ஆன் 2:286)

قال تعالى (فاتقوا الله ما استطعتم)سورة التغابن:16

அல்லாஹ் கூறுகின்றான்:

“உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்”  (அல்குர்-ஆன் 64:16)

சகோதரா! உனது வியாபாரத்தை துவக்குவதற்கு முன்னால் அல்லது தொழிற்சாலைக்கு வேலையாட்களை சேர்ப்பதற்கு முன்னால்  இஸ்திகாரா தொழுகையை தொழுதுகொள்!

சகோதரா! நீ ஒரு தொழிலுக்காக விண்ணப்பிப்பதற்கு முன்னால் அதில் நன்மையுண்டா? தீமையுண்டா? என்பதனை உன்னால் அறிய முடியாது! அல்லது ஒரு நோயாளி தனது நோயை குணப்படுத்த  வைத்தியசாலைக்கு செல்வதற்கு முன்னால், அல்லது ஒரு வீட்டையோ, தொலைதொடர்பு சாதனங்களையோ, ஒரு வாகனத்தையோ  வாங்குவதற்கு முன்னால் இஸ்திகாரா தொழுகையை தொழுது பிரார்தித்துக்கொள்!

சகோதரா! திருமணத்திற்காக தயாராகுவதற்கு முன்னால், திருமண பேச்சுவார்த்தையை துவக்குவதற்கு முன்னால், மணமகன் அல்லது  மணமகளைப் பார்ப்பதற்கு முன்னால் இஸ்திகாரா தொழுகையை தொழுது பிரார்தித்துக்கொள்!

சகோதரா! இஸ்திகாரா தொழுகை வெற்றியின் ஆரம்ப படித்தரமாகும்! அல்லாஹ்வின் நாட்டத்தால் இம்மை மறுமை வெற்றிக்கு காரணமாகவும் அமைகின்றது! அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடந்து அவனுடன் உண்மையான முறையில் நடந்துகொண்டால், அவன் மீதே நம்பிக்கை வைத்தால், வெற்றியின் நுழைவாயில்கள் அனைத்தையுமே அவன் திறந்து கொடுப்பான்.

இது அல்லாஹ்வின் அருள்! அவன் நாடியவருக்கு அருள்பாளிக்கின்றான்! அல்லாஹ் மகத்தான அருளுக்கு உரியவனுமாவான்.

வித்ர் தொழுகை

ஜமாஅத்துடன் தொழுவது விதியாக்கப்படாத ஸுன்னத்துத் தொழுகைகளில் மிக ஏற்றமானது வித்ரு தொழுகையாகும். இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களி...